புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

சர்ப்ப சேவா

இந்த நவீன காலத்தில் இரண்டு பேர் சேர்ந்து சுமுகமாக இருக்க முடிவதில்லை. அது கணவன் மனைவி என்று மட்டுமில்லை. உடன் பிறந்தோர் இருவர் அல்லது அப்பாவும் மகனும் அல்லது நண்பர்கள் இருவர் அல்லது வியாபாரக் கூட்டாளிகள் இருவர்  தாங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினாலும் பல நேரங்களில் அப்படி சேர்ந்து இருக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆனால் இவற்றில் மிகவும் பாதிக்கப்படுவது என்னவோ கணவன் மனைவிதான்.
நமது ஆன்மீகக் கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் சூட்சுமமான தீர்வு வைத்திருந்தனர். பல சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த ஆன்மீக வழிமுறையை ஒட்டி லிங்கபைரவி திருக்கோவிலிலும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் பல பயன்களுக்கு பல சடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சர்ப்ப சேவா. இரு நபர்கள்  கணவன் மனைவி, அப்பா மகன், இரு நண்பர்கள், இரு வியாபாரக் கூட்டாளிகள் என்று இருவர் சேர்ந்து இந்த சர்ப்ப சேவையில் பங்குபெறும்போது அவர்களுக்குள் நீடித்த நிலையான உறவு நிகழ்கிறது.

இந்தக் கோவிலில் இரண்டு விதமான சர்ப்ப சேவைகள் உள்ளன. கோவில் கருவறைக்கு மேல் உள்ள சர்ப்ப வடிவங்களில், புற்றுமண் நிரப்பும் சர்ப்ப சேவை, வாரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் நடைபெறும். சேவையின் போது புற்று மண்ணுடன் இன்னும் சில பொருள்களைக் கலந்து நாக வடிவத்திற்குள் நிரப்புவதாக அமைந்துள்ளது. இன்னொரு சர்ப்ப சேவை, பைரவி கோவிலுக்குள் இருக்கும் ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் நாகவடிவங்களுக்கு செய்யப்படுகிறது. இதில் பின்னிக் கொண்டிருக்கும் நாக வடிவத்தில் குங்குமம் நிரப்புவதாக அமைந்துள்ளது. இந்த சர்ப்ப சேவை ஒரு நாளில் இரண்டு முறை செய்யப்படுகிறது.

உறவுமுறையை பகிர்ந்து கொள்ளும் இருவர் சேர்ந்து இந்த சேவையில் பங்குகொள்ளமுடியும். இது மிகவும் சக்தி வாய்ந்த நாக மந்திரங்களுடன் செய்யப்படுகிறது. சர்ப்ப சேவையில் பங்கு கொண்ட இருவருக்கும் இடையில் உள்ள மனவேற்றுமைகள் அகற்றப்படுவதால், அவர்களுக்கிடையே இருக்கும் உறவு உறுதிப்படுகிறது. அந்த நாகங்களைப் போலவே அவ்விருவரின் வாழ்விலும் தழுவிக் கொள்ளும் தன்மை நிறைகிறது.

குறிப்பாக கருவுற்ற தாய்மார்களுக்கு இந்த செயல்முறை மிகுந்த பயனளிக்கும். கருவின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்க இது உதவி செய்கிறது. மேலும் குழந்தைபேறு விரும்பும் தம்பதியினர் இதில் பங்குகொள்ளும் போது மகப்பேறுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றது.
நாகதோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை, வாழ்வில் ஏற்படும் பெரும் தடைகள், பண விஷயங்களில் பின்னடைவு, நாள்பட்ட நோய்கள் போன்றவற்றிலிந்து விடுபடவும் சர்ப்ப சேவை பெரும் உதவியாக இருக்கும்.
சர்ப்ப சேவைக்கான அடிப்படையையும், சர்ப்பங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் சத்குரு கூறும்பொழுது.

“ஆன்மீக ஞானம் மற்றும் பாம்புகள் இவ்விரண்டும் பிரிக்க முடியாதவை. உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும், எந்த மதமாக, கலாச்சாரமாக இருந்தாலும், எங்கெல்லாம் ஆன்மீக ஞானம் என்பது அனுபவப்பூர்வமாக இருக்கிறதோ, அங்கு பாம்புகளும் அதிக எண்ணிக்கைகளில் இருக்கும். குறிப்பாக இந்தியாவில் பாம்பின் உருவம் இல்லாத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். யோகக் கலாச்சாரத்திலும், சுருளாக சுற்றியிருக்கும் பாம்பு, குண்டலினி சக்தியின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பூமியில் ஊர்ந்து வாழும் பாம்புகளுக்கு மனிதர்களைவிடவும் அதிகமான உணர்ந்தறியும் திறன் ( Perception ) உள்ளது. தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்தபோது அங்கு கிட்டத்தட்ட 400 பேர் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட செயல்முறையின் போது, ஒரு குறிப்பிட்ட பாம்பு, எப்படியோ கூட்டத்தில் ஊர்ந்துவந்து அருகே வந்து விட்டது. பலமுறை அதனை அருகில் இருக்கும் காட்டில் விட்டு விட்டு வருவோம். 30 நிமிடங்களில் மீண்டும் வந்துவிடும். பலமுறை விட்டுவிட்டு வந்தும், அது மீண்டும் மீண்டும் வந்தது.
ஒருவர் தியானத் தன்மையில் இருந்தால், அவரை நோக்கி ஈர்க்கப்படும் முதல் உயிரினம் பாம்புதான். எனவேதான் சாதுக்கள் மற்றும் முனிவர்கள் சிலைகளைக் பார்க்கும்போது, அவர்ளுக்கு அருகே பாம்புகள் இருப்பதாகவும் புற்றுகள் வளர்ந்திருப்பதாகவும் காட்டப்படுகிறது. இது இந்த உயிரினத்தின் உணரும் தன்மைக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றுகூட சொல்லலாம். மனிதன் உணர்வதற்கு ஏங்கும் விஷயங்களை பாம்புகள் மிக எளிதாக உணர்கின்றன.

பாம்புகளின் துல்லியமான உணரும் தன்மை நம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகலோகம் என்ற ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பூமிக்கு அடியில் இருப்பதாவும், அங்கு வசிப்பது பாம்புகள் மட்டுமல்ல, நாகர்கள் எனப்படும் இனத்தினர், அவர்கள்தான் இந்த தேசத்தில் மனித விழிப்புணர்வை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வகைசெய்தவர்கள் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். இங்கு மட்டுமின்றி உலகின் பல கலாச்சாரங்களிலும் நாகா இனத்தினர்தான் விழிப்புணர்வை மேம்படுத்த வகைசெய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கம்போடியாவில் உள்ள அங்க்கோர் தாம், அங்க்கோர் வாட் போன்ற கோவில்களையும் நாகா இனத்தினர்தான் கட்டினார்கள் என்று வரலாறு கூறுகிறது.
தற்காலத்திலும் பாம்புகளோடு நெருக்கமான தொடர்புடைய மனிதர்கள் இருக்கிறார்கள். நான் கூட அப்படித்தான், இருந்தும் நான் நாகா அல்ல. ஆனால் என் வாழ்க்கை பாம்புகளோடு நெருக்கமான தொடர்புடையது. என் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் ஒரு பாம்பு நிச்சயம் இருக்கும். தியானலிங்க பிரதிஷ்டைக்குப் பிறகு, என் உடல் மிகவும் சேதமடைந்திருந்தது. அப்போது என் உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ‘உடலின் செயல்பாடுகள் எல்லாம் சேதமடைந்து உள்ளன. தேறும் என்ற நம்பிக்கையே இல்லை,’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அமெரிக்க மருத்துவர்களோ, “உங்கள் நிலை அபாயகரமாக உள்ளது. நீங்கள் விமானத்தில் பயணம் செய்வதே கூடாது,” என்று எச்சரித்தனர். அந்நிலையில் பாம்பின் ரூபத்தில் வந்தவர்கள் எனக்கு நன்மை செய்து உதவினார்கள். இது வெறும் கற்பனை அல்ல. மற்றொரு பரிமாணத்தில் இது நிஜம். ஈஷா வெளியிட்டுள்ள ஞானத்தின் பிரமாண்டம் என்னும் புத்தகத்தில்கூட இதுபற்றிய செய்திகள் விபரமாக உள்ளன.
‘உணரும்தன்மை’ என்பது பாம்புகளுக்கு இயல்பாகவே இருப்பதால், உணர்தலின் உச்சத்தை உணர்த்த பாம்புகள் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிவனின் மூன்றாம் கண் திறப்பதுதான் உணர்தலின் உச்சம். அதை உணர்த்த படம் எடுத்த ஒரு நாகம், சிவனின் தலைமீது உள்ளது. பாம்பு தரையில் ஊரும் ஒரு பிராணி. அதை சிவன் தன் காலுக்கு அருகில் வைக்கவில்லை; தன்னைவிட அவை உயர்ந்தவை என்பதை உணர்த்த தலைமேல் வைத்திருக்கிறார்! இன்னும் சொல்லப்போனால் ஒருவர் செய்யும் யோகப்பயிற்சிகள் அனைத்துமே அவருடைய சக்திநிலையை மேம்படுத்துவதற்காகத்தான்.
தூய்மையான ஆன்மீகமும் பாம்புகளும் பிரிக்க முடியாத தன்மைகளாக இருப்பதால் நாம் லிங்க பைரவி கோவிலில் பாம்புகள் வளர்க்கலாம் என்று விரும்பினோம். ஒரு பாம்பைக் கொண்டுவந்து இங்குவிட்டால், அது நேராக பைரவியை நோக்கித்தான் செல்லும். கோவிலுக்குள்ளே பாம்பு இருந்தால், மக்கள் கோவிலைவிட்டு வெளியே ஓடிவிடுவார்கள். எனவே இங்கு பாம்புகளின் குறியீடுகளை அமைத்திருக்கிறோம். இங்கு இரண்டு நாகங்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு இருப்பது போன்ற வடிவம் உள்ளது.

இந்த இரண்டு நாகங்கள் குறிப்பிட்ட விதமான தன்மையில் உள்ளன. அவை பின்னிக் கொண்டிருந்தாலும், அது பிணைப்பு அல்ல. விழிப்புணர்வுடன் கூடிய தழுவுதல் என்று சொல்லலாம். பிணைக்கபட்ட நிலைக்கும், தழுவிக் கொள்ளும் நிலைக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. பிணைப்பு என்பது கட்டாயத் தேவைகளால் நிகழ்வது. ஆனால் தழுவிக்கொள்ளுதல் என்பது ஆழமான ஈடுபாட்டின் காரணமாக நிகழ்வது. இங்குள்ள நாகங்கள் தழுவிக்கொண்டு நடனமாடுவது போல் உள்ளன.
இந்த ஆழமான ஈடுபாட்டை மனிதர்களுக்குள்ளும் நாம் கொண்டுவர முடியும். அதற்காகவே ‘சர்ப்ப சேவை’ என்னும் ஒரு செயல்முறையை இங்கு உருவாக்கியுள்ளோம். இந்த செயல்முறையின் மூலம் மனிதர்களின் உணர்ந்துகொள்ளும் தன்மையை மேம்படுத்த முடிகிறது.
சர்ப்பசேவை பற்றிய விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு:
தொலைபேசி எண்: 94890 00333/ 94433 65631
Download As PDF

No comments:

பிரபலமான கட்டுரை